வெற்றிகளைவிட தோல்விகளை நேசிக்கும் எனக்கு
தினம் தினம் தோல்விகளைத் தந்து கொண்டிருக்கின்றாய்...
வெற்றியைத் தேடி நான் பயணிக்கவேண்டுமென்று.
நீ ஜெயிக்க வேண்டுமென்றே
நான் தோற்றுப் போவதை நீ அறியாய்....
அன்று மணமாலை சூடி
மணப்பொண் கோலத்தில்
மணமேடையில் நீ அமர்ந்து
தாலிக்காக காத்திருக்கும் நொடியில்
சபையின் முதல்வரிசையில்
உன்னை வாழ்த்த வந்தமர்ந்த என்னைப் பார்த்து
பதறிய மனதோடு கலங்கிய கண்கள்
உன் தோல்வியைக் காட்டியது,
யாரும் அறியாமல்
என் புன்னகை அதை மூடி மறைத்தது.
கொடுமையிலும் கொடுமை
காதலி கல்யாணத்துக்கு வாழ்த்துச் சொல்வது.
என்னசெய்வது
கடைசியாக என் காதலியாய்
பார்க்கவேண்டும் என்ற ஆசையின் தவிப்பு.
இன்று நீ
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணம் வீசுகின்றாய்
தூரே நின்று நான் சுவாசிக்கின்றேன்.
நெருங்கும் இடைவெளியில் நீயிருந்தும்
நேசத்தோடு விலகி நிற்கின்றேன்.
வௌவால் வந்து முட்டினாலும்,
காற்று கதவைத் தட்டினாலும்
ஓடி வந்து பார்க்கின்றேன்
ஒரு வேளை நீயாய் இருக்குமோ என்ற கனவோடு.
மணமாகியதையும் மறந்து
தொலைபேசியில் வைக்கின்ற தொடர்பு
என்னை மறக்கவில்லை என்பதை
நினைவு படுத்தினாலும்
வேறு பெண்ணை மணக்க
என்மனம் விரும்பவில்லை,
வாழும் வரை
உன்னைக் காதலிக்க வேண்டுமென்பதற்காக....
அன்பே..!
ஒருத்தியை மணந்து கொண்டு
பெண் சுகத்தை அனுபவிக்க சொல்லி
தொல்லை செய்கின்றாய்.
உன் பேச்சுக்கள் தருகின்ற சுகத்தை
எந்தப் பெண்ணாவது தருவாளா?
இருந்தால் காட்டிவிடு
அவளையே மணக்கின்றேன்.
பெண்ணே...!
கனவில் நீ தந்த சுகமொன்றே போதும்
தயவு செய்து
பெண் சுகத்துக்காக என்னை மணக்க சொல்லாதே..!
இருக்கின்ற வலி போதும் அதையும் கிள்ளிவிடாதே..!
பருவத்தில் செய்தபயிர்
வீடுவந்து சேரவில்லை,
விளைபயிரும் என்னிடமில்லை
விழிகொண்டு தவிக்கின்றேன்,
வழியின்றி விழிக்கின்றேன்.
கௌரவ அட்டை என் கவிதைகளை மறைத்தது
இதயம் கொண்ட காதல் கைமாறிப் போனது.
எங்கோ இதயம் துடித்து
உடலுக்குள் உயிர் ஓடுகின்றது.
மாலையான மலரை பார்த்து
மனம் ரசிக்கின்றது.
மணந்து சென்றாலும் மறக்காத பெண்ணே..!
என்னை மறந்து வாழடி
மலர் வாடிய பின்பும் மணம் வீசுதடி.
நினைவுகளோடு தூங்கச் செல்கின்றேன்.
உனக்குமெனக்கும்
நாளை நல்லபொழுது புலருமென்று.